ஒரே படத்தில் 6 கதைகள் 6 இயக்குனர்கள்
03 ஏப்,2017 - 11:53 IST

தமிழ் சினிமாவில் இளைஞர்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு புதுமையை செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த வரிசையில் இப்போது ஒரு திரைப்படத்தில் 6 கதைகள் வருகிறது. இந்த 6 கதைகளையும் 6 இயக்குனர்கள் இயக்குகிறார்கள். 6 கதைகளின் கிளைமாக்சும் படத்தின் கடைசியில் தான் வரும். படத்தின் பெயர் ஹக்ஸா-6 அத்தியாயம், ஹெக்ஸா என்றால் கிரேக்க மொழியில் 6 என்று பொருள், இந்த புதிய முயற்சியை ஆஸ்கி மீடியா சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது...
எனது சொந்த ஊர் சேலம். பல உலக புகழ் பெற்ற பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களில் அமெரிக்காவில் பணிபுரிந்து, தாயகம் திரும்பியிருக்கிறேன். ஐபோன், ஆண்டிராய்ட் போன்களில் பிரபலமான 'ப்ளாஷ் கார்ட்ஸ் தமிழ் லெசன்ஸ்' என்னும் ஆப்-யை வடிவமைத்து, பெங்களூரில் 'வண்ணால மொபல் ஆப்ஸ் (பி) லிமிடேட்' என்னும், மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறேன்.
முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை ஆறு இயக்குனர்கள் இயக்குகிறார்கள். அமானுஷ்யத்தை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படும். இது உலக அளவில் முதல் முயற்சி. இது ஒரு பரபர திகில் படம் தான் என்றாலும் ஆறு அத்தியாயமும், படம் பார்ப்பவர்களுக்கு அறுசுவை உணவுண்ட திருப்தியைத் தரும்.
பிரபல எழுத்தாளரும், மனிதன், சென்னையில் ஒரு நாள், வன யுத்தம் போன்ற படங்களின் வசனகர்த்தாவும் வனமகன், நேத்ரா ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி வருபவருமாகிய அஜயன் பாலா, ஒர் அத்தியாயத்தை எழுதி முதல் முறையாய் இயக்குனராக அறிமுகமாகிறார். பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான “கேபிள் சங்கர்” ஒரு அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார். ஆறு அத்தியாயங்களில் ஒர் அத்தியாயத்தை நான் இயக்கி உள்ளேன். மர்ம தேசம் முதல் ஜீபூம்பா வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ், 'லைட்ஸ் ஆன் மீடியா' சுரேஷ், குறும்பட உலகின் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் ஒவ்வொரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.
'சட்டம் ஒரு இருட்டறை', 'தொட்டால் தொடரும்' போன்ற படங்களில் நாயகன் தமன், 'விஜய் டிவி புகழ்' விஷ்ணு, 'பசங்க' கிஷோர், 'குளிர் 100' சஞ்செய், 'நான் மகான் அல்ல' வினோத், பேபி, வீர சிவாஜி, நிசப்தம் படங்களில் நடித்த பேபி சாத்தன்யா மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோருடன் மேலும் பல பதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
சீனியர் கலைஞர்களான சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களில் ஒளிப்பதிவு செய்ய, பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன் இப்படத்தின் ஒர் அத்தியாயத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக களம் இறங்குறார். இவர்களைத் தவிர புதியவர்களான அருண் மணி பழனி, அருண்மொழி சோழன் மற்றும் மனோ ராஜா ஒளிப்பதிவாளர்களாய் பணியாற்றியுள்ளனர்.
தாஜ்நூர், சாம், ஆகியோருடன் ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் போன்ற வளரும் இசைக் கலைஞர்கள் புதிய இசையமைப்பாளர்களாக அறிமுகமாகியுள்ளனர் ஹெக்ஸா' எனும் 6 அத்தியாயம் திரையில் ஒரு புதிய அனுபவம் தர இன்னும் சில மாதங்களில் வெளியாகிறது. என்கிறார் சங்கர் தியாகராஜன்.
0 comments:
Post a Comment