Monday, April 3, 2017

விஜய், சூர்யா படங்களுக்கு சிக்கல்?


விஜய், சூர்யா படங்களுக்கு சிக்கல்?



03 ஏப்,2017 - 17:47 IST






எழுத்தின் அளவு:








தமிழ்த் திரையுலகில் தனது படங்களை வாங்கிய வினியோகஸ்தர்கள் நஷ்டமடைந்தால் அவர்களுக்கு நஷ்ட ஈட்டுத் தொகை கொடுக்கும் வழக்கத்தை ரஜினிகாந்த் ஆரம்பித்து வைத்தார். ஒரு நல்ல எண்ணத்தில் அவர் ஆரம்பித்து வைத்த அந்த விஷயம் அதன் பின் அவருக்கே எதிராகவும் அமைந்தது.

அந்த நஷ்ட ஈட்டுத் தொகை பெறும் விவகாரத்தை அதன் பின் மற்ற சில ஹீரோக்களின் படங்களுக்கும் நஷ்டமடைந்தவர்கள் பரப்பி வைத்தார்கள். சில ஹீரோக்கள் அதை வெளியில் தெரியாமல் செய்தார்கள், சிலர் பிரச்சனை இல்லாமல் செய்து முடித்தார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு தமிழ்த் திரையுலகில் சில ஹீரோக்களுக்கு எதிராக 'ரெட்' போடப்பட்டுள்ளது என்று தகவல் பரவியது. அதன்பின் அந்த விவகாரம் அப்படியே அமுங்கிப் போனது என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால், வினியோகஸ்தர்கள் தரப்பில் அந்த விஷயத்தை கிடப்பில் போடவில்லை என்றும், நஷ்ட ஈடு விவகாரம் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்கிறார்கள்.

அதன்படி 'பைரவா' பட நஷ்ட ஈடான 15 கோடி ரூபாயைக் கொடுத்தால்தான் விஜய் அவருடைய அடுத்த படத்தையும், 'சி 3' நஷ்ட ஈடான 10 கோடி ரூபாயைக் கொடுத்தால்தான் சூர்யா அவருடைய அடுத்த படத்தையும், 'போகன்' நஷ்ட ஈடான 6 கோடி ரூபாய் தொகை கொடுத்தால்தான் ஜெயம் ரவி அடுத்த படத்தையும் வெளியிட முடியும் என்கிறார்கள். இந்தப் பட்டியலில் தனுஷ், சிவகார்த்திகேயன், விஷால், கார்த்தி ஆகியோரும் இருப்பதாகச் சொல்கிறார்கள்.

விஷால் தற்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக ஆகியுள்ள நிலையில் முன்னணி நடிகர்களுக்கு எதிராக இப்படி ஒரு நிலை உருவாக்கப்பட்டுள்ளது குறித்து நடிகர் சங்க செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என திரையுலகத்தில் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

விஷாலுக்கு இந்த ரீதியில் பல நெருக்கடிகளைக் கொடுக்க தோற்றுப் போனவர்கள் தயாராகி வருவதாகவும் ஒரு தகவல் உலவி வருகிறது.


0 comments:

Post a Comment