ஜெயலலிதாவிற்கு திரையுலகம் பேரணியாக சென்று அஞ்சலி
23 டிச,2016 - 17:30 IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பெப்சி உள்ளிட்டவர்கள் அமைதி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர். முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரின் திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவர் அடக்கம் செய்யப்பட்ட நாள் முதல் தற்போது வரை தினமும் ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ் திரையுலகம் சார்பில் இன்று அமைதி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி எஸ். தாணு, பெப்சி சிவா ஆகியோர் தலைமையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் வரை ஊர்வலமாகச் சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணியில் சுமார் 23 திரைத்துறை சங்கங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துக் கொண்டனர். மூத்த நடிகர் சங்கிலி முருகன், திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், தயாரிப்பாளர் கதிரேசன், பெப்சி சிவா, ஜாக்குவார் தங்கம், எடிட்டர் மோகன், யுடிவி தனஞ்செயன், பிசிஸ்ரீராம் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்களும் பங்கேற்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாணு, ‛‛ஜெயலலிதாவின் இழப்பு, ஒட்டுமொத்த அகிலத்திற்கே பெரிய இழப்பு, குறிப்பாக கலையுலகத்திற்கு பேரிழப்பு, அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது'' என்றார்.
0 comments:
Post a Comment