நுங்கம்பாக்கம் ஆனது சுவாதி கொலை வழக்கு
11 ஜூலை, 2017 - 17:48 IST
கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு அவரும் புழல் சிறையில் மர்மமான முறையில் இறந்தார். இந்த சம்பவத்தை மையமாக வைத்து சுவாதி கொலை வழக்கு என்ற பெயரில் படமாக தயாரித்துள்ளனர். புதுமுகங்கள் நடித்துள்ள இப்படத்தை எஸ்.டி.ரமேஷ் செல்வன் இயக்கியுள்ளார்.
"என் அனுமதி இல்லாமல் படம் தயாரித்துள்ளனர். இந்தப் படம் வெளிவந்தால் எங்கள் குடும்பம் மனரீதியாக பாதிக்கப்படும். எனவே படத்தை தடை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சுவாதியின் தந்தை சந்தான கோபால கிருஷ்ணன் போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் படத்தின் இயக்குனர் எஸ்.டி.ரமேஷ் செல்வன், தயாரிப்பாளர் சுப்பையா, கதை ஆசிரியர் ரவி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த மூவரும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலை இருந்தது.
இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று மூவரும் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் மூவரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில் "சுவாதி கொலை வழக்கு" என்று பெயரிடப்பட்டிருந்த இப்படத்தின் தலைப்பு தற்போது, "நுங்கம்பாக்கம்" என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இப்படம் சுவாதிக்கோ, ராம்குமாருக்கோ, காவல்துறைக்கோ எதிரான படம் அல்ல. சுவாதி, ராம்குமாரின் குடும்பத்தை பற்றியோ, இருவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தே எந்த காட்சியும் படத்தில் இல்லை. நாட்டில் இப்படி ஒரு சம்பவம் இனி நடக்க கூடாது என்ற நல்ல எண்ணத்தையே இந்தப்படம் பிரதிபலிக்கும் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment