தமிழகத்தில் மறு தேர்தல் தான் தீர்வு - கமல்
20 பிப்,2017 - 09:57 IST
தமிழகத்தில், மறு தேர்தல் நடத்த வேண்டும், என, நடிகர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். ஆங்கில, டிவி சேனலுக்கு, நடிகர் கமல்ஹாசன் நேற்று அளித்த பேட்டி: அரசியல்வாதிகள் மீது, விருப்பமும், வெறுப்பும் ஒரு சேர மக்களிடையே உருவாகி உள்ளது. இதை, வீதியில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இது, அச்சம் தரக்கூடியதாகவும் அமைந்துள்ளது. நான் அரசியலற்றவனாக இருக்கிறேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை. ஊழலுக்கு எதிரான என் கசப்புணர்வை, நான் எப்போதும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறேன். ஆரம்பத்தில், நான் கிரிமினல் கும்பல் என சொன்ன போது, அது, அரசியல் சார்பு இல்லாத ஒருவனின் கோபமாக கருதப்பட்டது.
கொட்டி விட்டோம்: இப்போது, ஊழல் வழக்கில் சசிகலா மட்டுமல்ல, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கூட குற்றவாளி தான் என, உச்ச நீதிமன்ற தீர்ப்பு உறுதிபட தெரிவித்து உள்ளது. சசிகலா கும்பலால், முதல்வராக நியமிக்கப்பட்டவர் தான், இந்த பழனிசாமி. சட்டசபையை சுத்தம் செய்ய வேண்டும். மாறாக பரிசோதிக்க கூடாது. எனவே, மறுதேர்தல் நடத்த வேண்டும். இப்போது, மக்கள் தங்கள் கருத்தை தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை. தேர்தல் வைத்தால், தங்கள் மனதில் உள்ளதை, மக்கள் உணர்த்துவர். மறு தேர்தல் என்பது செலவு வைக்கக் கூடிய ஒன்றுதான். ஆனால், என்ன செய்ய? தரையில் பாலை கொட்டி விட்டோம். அதை சுத்தம் செய்ய வேண்டும். எனவே, மறுதேர்தல் வைத்து, மீண்டும் பால் கறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நான் கோபக்காரன் : அரசியலுக்கு வர எனக்கு பயமாக இருக்கிறது. நான் மிகவும் கோபக்காரன். இந்தியாவுக்கு என் போன்ற கோபக்கார அரசியல்வாதிகள் வேண்டாம். நல்ல சமநிலை உடைய மனிதர் தான் அரசியலுக்கு தேவை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment