இசை சொல்லாத கதையை சவுண்டு சொல்லிவிடும்: கமல்
04 ஜூலை, 2017 - 11:37 IST
நடிகை லிஸி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடத்தி வரும் லீ மேஜிக் லாண்டேர்ன் நிறுவனத்தில் தி லிஸி லட்சுமி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இது ஹாலிவுட் தரத்திலான டப்பிங் ஸ்டூடியோவாகும். இதன் திறப்பு விழா நடந்தது. கமல்ஹாசன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:
ஒரு சினிமாவுக்கு சவுண்டு மிகவும் முக்கியம். நாங்கள் நடிக்க வந்த காலத்தில் இருந்த மைக் வேறு. வசனத்தை நினைவில் வைத்துக் கொண்டு மைக் பக்கத்தில் நின்று பேசினோம். நவீன மைக்குகள் வர வர பின்னால் நகர்ந்து நகர்ந்து மல்லாக்க படுத்துவிட்டோம். ஒரு இசை சொல்லாத கதையை சவுண்டு சொல்லிவிடும். ஒரு சினிமாவுக்கு கேமராவும், சவுண்டும் மிக முக்கியம். வசனம் பேசி பேசித்தான் சினிமா வளர்ந்தது. பலர் பேச்சையே வியாபாரமாக்கி பல நிலைகளுக்குச் சென்றார்கள். ஆனால் அந்த வசனத்துறையை நாம் கவனிக்காமல் விட்டது பிழை.
இங்கே இருக்கிற ரசூல் பூக்குட்டி அடுத்து படம் இயக்கப்போகிறார். அதற்கு அவர் பயிற்சியும், ஆலோசனையும் பெற வேண்டியது கே.விஸ்வநாத்திடம். அவர் சாரதா ஸ்டூடியோவில் சவுண்ட் ரிக்கார்ரிஸ்டாக இருந்தவர். அதனால்தான் அவர் படங்களில் வசனம் தனித்து தெரியும். ரசூல் பூக்குட்டி இயக்கும் படமும் விருது பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு கமல் பேசினார்.
விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், ஒலிப்பதிவாளர் ரசூல்பூக்குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment