பிளாஷ்பேக்: சிவாஜி படத்தில் நடிக்க மறுத்த தியாகராஜ பாகவதர்
11 பிப்,2017 - 10:25 IST
தமிழ் சினிமாவில் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர். சினிமாவில் கொடி கட்டிப் பறந்த முதல் ஹீரோ. ஆனால் லட்சுமி காந்தன் கொலை வழக்கில சிக்கி சிறைக்கு சென்று வந்த பிறகு அவருக்கு எல்லாமே இறங்குமுகம் தான். சிறைக்கு சென்று வந்த பிறகு அவர் நடித்த படங்கள் எல்லாமே தோல்வி அடைந்தன. சொந்தப் படம் எடுத்து பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டினார்.
அப்போது தியாகராஜ பாகவதர் நடித்த அம்பிகாபதி படத்தை பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசன் மீண்டும் தயாரித்தார். இதில் அம்பிகாபதியாக சிவாஜி நடித்தார், அமராவதியாக பானுமதி நடித்தார். படத்தை தயாரித்த ஏ.எல்.சீனிவாசன் இந்தப் படத்தில் தியாகராஜ பாகவதர் அம்பிகாபதியின் தந்தை கம்பராக நடித்தால் நன்றாக இருக்கும். அதோடு அவரது பொருளாதார சிக்கலுக்கும் உதவின மாதிரியும் இருக்கும் என்று கருதி பாகவதரை அணுகி கேட்டார். சிவாஜிக்கு கொடுக்கும் சம்பளத்தை விட 10 ஆயிரம் ரூபாய் அதிகமாக தருகிறேன் என்றும் சொல்லிப் பார்த்தார். ஆனால் வித்யாகர்வம் கொண்ட பாகவதர் அதற்கு மறுத்து விட்டார்.
"அம்பிகாபதியில் என்னை கம்பீரமாக பார்த்த ரசிகர்கள் என்னை கம்பர் வேடத்தில் வயதான தோற்றத்தில் பார்க்க வேண்டுமா?" என்று கூறி மறுத்து விட்டார். இதை தொடர்ந்து ஸ்ரீவள்ளி படத்தில் நாரதராக நடிக்க கேட்டனர். அதற்கும் மறுத்துவிட்டார். ஸ்ரீவள்ளியில் சிவாஜி முருகனாகவும், பத்மினி வள்ளியாகவும் நடித்தனர். பிற்காலத்தில் பாகதவர் பாக்கிய சக்கரம் என்ற படத்தை சொந்தமாக தயாரிக்க முடிவு செய்து அதில் சிவாஜி நடிக்க வேண்டும் என்று விரும்பினார். அதற்கு சிவாஜி மறுத்துவிட்டார்.
0 comments:
Post a Comment