சாத்னா திருமணத்தால் எய்தவனுக்கு பாதிப்பு இல்லை
20 ஏப்,2017 - 11:24 IST
பிரண்ட் பெஸ்டிவல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.சுதாகரன் தயாரித்துள்ள படம் எய்தவன். சக்தி ராஜசேகரன் இயக்கி உள்ளார். கலையரசன், சாத்னா டைட்னஸ், வேல.ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், கிருஷ்ணா, சவுமியா, சாண்ட்ரா எமி உள்பட பலர் நடித்துள்ளனர். சி.பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பார்திவ் பார்கவ் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது தான் விநியோகஸ்தர் கார்த்திக்கை சாத்னா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் படத்திற்கு பாதிப்பா என்பது குறித்து இயக்குனர் சக்தி ராஜசேகரன் கூறியதாவது:
சாத்னா பிச்சைக்காரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே எங்கள் படத்திற்கு அவரை ஒப்பந்தம் செய்தோம். படத்தின் இறுதி கட்டத்தில் இருந்தபோது தான் சாத்னா திருமணம் வந்தது. எங்கள் படத்தை முடித்துக் கொடுப்பதற்காகவே திருமணத்தை தள்ளி வைத்தார். அவரால் படத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை. திருமணமான ஹீரோயின் படம் என்பதால் யாரும் வாங்க யோசிப்பார்களோ என்று நினைத்தோம். ஆனால் படத்தின் கதைதான் பலம் என்பதால் நல்ல விலை கொடுத்து வாங்கினார்கள்.
சாத்னா படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நகரின் முக்கிய இடத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. அந்த சம்பவத்தால் 16 பேர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லோருமே அந்த சம்பவத்திலிருந்து எப்படியாவது தப்பிக்கவே நினைக்கிறார்கள். ஹீரோ மட்டும் அந்த சம்பவத்தில் ஈடுபட்ட அம்பை எய்தவன் யார் என்று தேடுகிறார். காதல், காமெடி, ஆக்ஷ்ன் நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகி இருக்கிறது என்றார் சக்தி ராஜசேகரன்.
0 comments:
Post a Comment